கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கேவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் கேவிஎஸ் சீனிவாசன், கேஎம் சுவாமிநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நூலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நூலக கட்டிடம் போதிய பராமரிப்பு இல்லாமல், கட்டிடங்களின் மேற்கூரை விரிசல் அடைந்தும், சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும் சிதலமடைந்து காணப்படுகிறது. நூலகத்திற்கு வருபவர்கள் அச்சத்துடன் உள்ளே அமர வேண்டிய சூழல்நிலை உள்ளது. எனவே, நூலகம் அமைக்க இடம் கொடுத்தால், காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் எங்களது சொந்த செலவில் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட மாதிரி டிஜிட்டல் நூலகமாக அமைத்து தருகிறோம்.
நூலக கட்டிடம், வாசகர்களுக்கு தேவையான கணினிகள், அதிவேக இணையதள வசதி, போட்டித் தேர்வுக்கான அனைத்து புத்தகங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தருகிறோம். எனவே, மாவட்ட நிர்வாகம் நூலகம் அமைக்க தேவையான இடத்தை ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.