கோவையில் 235 பவுன் நகை, பணம் : கொள்ளை வழக்கில் மேலும் 3 பேர் கைது :

கோவையில் நகை வியாபாரியிடம் 235 பவுன் நகை, ரூ.7.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஏ.சண்முகம்(68). நகை வியாபாரியான இவர், கோவை வடவள்ளி சக்தி நகரில் வசிக்கிறார். கடந்த 30-ம் தேதி 235 பவுன் நகை, ரூ.7.5 லட்சம் தொகையுடன் வடவள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சண்முகம் சென்றபோது, மர்மநபர்கள் அவரை தாக்கி நகை, பணத்தை பறித்துச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீஸார் வழக்கு பதிந்து, பவானி சிங், அப்துல் ஹக்கீம், அஷ்ரப் அலி உள்ளிட்ட 7 பேரை சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய சிக்கந்தர் பாஷா, சம்சுதீன், அன்பரசன் ஆகிய மேலும் மூன்று பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 212 பவுன் தங்க நகைகள், 5.5 லட்சம் தொகை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

பின்னர், ஐஜி சுதாகர் கூறும்போது, ‘‘கைது செய்யப்பட்ட பாஷா காய்கறி கடை வைத்துள்ளார். சண்முகம் ஹால்மார்க் செய்ய நகைகளை கொடுக்கும் கடையில் வேலை பார்த்து வந்த பவானி சிங் கொடுத்த தகவல் அடிப்படையில் திட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். அதிக பணம், நகைகளை எடுத்துச் செல்லும் வியாபாரிகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் இரு சக்கரங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE