முன்னாள் சிறப்பு டிஜிபி பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
400 பக்க குற்றப்பத்திரிக்கை
இதனைத்தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார், முன்னாள் டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி தாக்கல் செய்தனர்.இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி ஆகிய இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களுக்கு ஆஜராவதி லிருந்து விலக்கு கேட்டு அவர்களது வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கில் நேற்று முன்தினம் ஆஜரான பெண் எஸ்பி 6 மணி நேரம் தொடர்ந்து சாட்சியளித்தார்.
தொடர்ந்து நேற்றும் பெண் எஸ்பி நடுவர் கோபிநாதன் முன்பு சாட்சியம் அளித்தார். இதையடுத்து வழக்கு விசார ணையை நாளை மறுநாளுக்கு (நவ.15) நடுவர் கோபிநாதன் ஒத்திவைத்தார்.
கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.