முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளை தொடர - புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம் :

இந்திய ராணுவ அதிகாரிகள் முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளை தொடர புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துடன் இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் பயிற்சிப் பிரிவு பிரதிநிதியான மேஜர் ஜெனரல் விவேக் காஷ்யப், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் அமரேஷ் சமந்தராயா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் கூறுகையில், “இந்திய ராணுவத்துடன் (பயிற்சிப் பிரிவு) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய பல்கலைக்கழகம் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை தொடர உதவுகிறது. ஆயுதப்படைகளுக்கு தேவைப்படும் எந்தக் கல்வி ஆராய்ச்சிக்கும் தயக்கமின்றி பல்கலைக்கழகம் உதவும். எதிர்காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள துறைகளை தவிர்த்து முடிந்தவரை மேலும் பல்வேறு துறைகளில் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு அதிகபட்ச உதவியை வழங்குவோம்” என்று தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின் பயிற்சிப் பிரிவு பிரதிநிதியான மேஜர் ஜெனரல் விவேக் காஷ்யப் கூறுகையில், “நானோ அறிவியல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, போர்த்திறனியல் மற்றும் இந்திய ராணுவத்தின் தேவைக்கேற்ப பல படிப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் அதிகமாக இளம் அதிகாரிகளை அனுப்ப இந்திய ராணுவம் முயற்சி செய்யும்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து மேஜர் ஜெனரல்காஷ்யப், சர்வதேச உறவுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் புல முதல்வர் பேராசிரியர்சுப்ரமணியம் ராஜூ உள்ளிட்டோ ருடன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளை பார்வை யிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE