சென்னிமலை வனப்பகுதிக்குள் கழிவுகளை கொட்டிய வேன் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

சென்னிமலை அருகே வனப்பகுதியில் கழிவுகளை கொட்டிய வேனைவனத்துறையினர் பறிமுதல் செய்து, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலைச் சுற்றி 1700 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள தார் சாலை ஓரங்களில், கோழிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டதையடுத்து, வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சென்னிமலை வனவர் சந்தோஷ், வனக் காப்பாளர் கி.பாரதி மற்றும் வனத்துறையினர் சென்னிமலை - ஊத்துக்குளி சாலையில் ரோந்து சென்றபோது, வேனில் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டியவர்களைப் பிடித்து விசாரித்தனர்.

இதில், வேனில் வந்தவர்கள் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த சின்னராஜா, வேலுச்சாமி, கஜேந்திரன், தமிழரசன், மாரிமுத்து மற்றும் ரமேஷ் என்பதும், திருப்பூர் பகுதியில் இருந்து வீடுகளில் உள்ள கழிப்பறை கழிவுகளை சேகரித்து வனப்பகுதியில் கொட்ட வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த வனத்துறையினர், கொட்டிய கழிவுகளை சுத்தம் செய்தபின்னர், வேனை ஒப்படைப்பதாகக் கூறி பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE