பேரூர் குளத்தில் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணி ஒத்திகை :

பருவமழை முன்னெச்சரிக்கையாக தீயணைப்புத் துறையினரின் மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சி கோவை பேரூர் பெரியகுளத்தில் நடந்தது.

வடகிழக்கு பருவமழைக்காலத்தை யொட்டி, கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில், பொதுமக்களுக்கு மீட்புப் பணிமுறைகள் குறித்து ஒத்திகை நடத்துதல், துண்டுப் பிரசுரங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவைப்புதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், பேரூர் பெரியகுளத்தில் மீட்புப் பணி ஒத்திகை நடந்தது. குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தவறி விழுந்தவரை எவ்வாறு உயிருடன் மீட்பது, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட இடங்களில் இருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எவ்வாறு வெளியேறி தப்பிப்பது போன்றவை குறித்து தகுந்த உபகரணங்களுடன் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர். விழிப்புணர்வு தொடர்பான துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE