புதுச்சேரி தேர்தல் ஆணையர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு :

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ். இவர் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் முதலாவது குறுக்குத் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த 29-ம் தேதி தீபாவளி விடுமுறையையொட்டி குடும்பத்துடன், கேரள மாநிலம் சென்றிருந்தார். விடுமுறையை முடித்துவிட்டு, கடந்த 9-ம் தேதி புதுச்சேரியில் உள்ள வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. இதைப் பார்த்த அவரும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 12.5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் ரெட்டியார்பாளைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் அவரது வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE