திட்டாணிமுட்டம் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து முளைவிட்ட நெல்மணிகள் :

திருவாரூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால், நெல்மணிகள் முளைவிடத் தொடங்கி உள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், கொரடாச்சேரி அருகேயுள்ள திட்டாணிமுட்டம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 7,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால், நெல்மணிகள் முளைவிடத் தொடங்கி உள்ளன.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் முருகையன், தம்புசாமி ஆகியோர் கூறியது:

திட்டாணிமுட்டம் நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசு முறையாக இயக்கம் செய்யாததால், கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தொடர்மழை காரணமாக கொள்முதல் நிலையத்தைச் சுற்றிலும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வந்துசெல்ல முடியாத நிலை ஏற்பட்டு, நெல் மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் முளைவிடத் தொடங்கிவிட்டன. சேதமடைந்த நெல்மணிகள் தவிர எஞ்சியுள்ள நெல்மணிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE