பயிர்க் காப்பீடு செய்ய டிச.15 வரை அவகாசம் : காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தல்

சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்ய டிச.15-ம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்குழுவின் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை தெரிவித்துள்ளது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக 1.20 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

வாய்க்கால் மற்றும் வடிகால்கள் முழுமையாக தூர்வாரப்படாத காரணத்தால், நீரோட்டம் தடைபட்டு மழைநீர் வயல்களுக்குள் பாய்ந்து பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள குறுவை நெற்கதிர்கள் சாய்ந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சம்பா நடவுக்கான 1,500 ஏக்கர் நாற்றங்காலிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில், வேளாண் துறை சம்பா பருவ பயிர்க் காப்பீடு செய்ய நவ.15-ம் தேதி கடைசி நாள் என்று அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடைசி நாள் டிச.15-ம் தேதி என்று அறிவித்துள்ளது. கடந்த ஆட்சியில் பயிர்க் காப்பீடு செய்ய டிச.18-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. எனவே, தற்போதும் அனைத்து விவசாயிகளும் சம்பா பயிர்களை காப்பீடு செய்ய டிச.15-ம் தேதி வரை அவகாசம் அளிக்க வேண்டும்.

மேலும், மழைநீர் தேங்கியுள்ள நாற்றங்காலுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நஷ்ட ஈடாக ரூ.15,000 வழங்க வேண்டும். அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ள குறுவை பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கும், தண்ணீர் தேங்கியுள்ள சம்பா நடவு வயலுக்கு ஏக்கர் ஒன்றுக்கும் தலா ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள், உழவர்களுக்கு சிட்டா அடங்கல் உடனடியாக வழங்கி, பயிர்க் காப்பீடு செய்வதற்கு உதவ வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக பயிர்க் காப்பீடு பதிவு செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE