தாம்பரம் மாநகராட்சிக்கு ஆணையரை நியமிக்க வேண்டும் : மழை பாதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தமிழகத்தின் 20-வது மாநகராட்சியாக தாம்பரம் உருவெடுத்துள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் இன்னும் ஆணையர் நியமிக்கப்படவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மாநகராட்சியுடன் இணைந்த பேரூராட்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றிய செயல் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர், கூடுதல் பொறுப்பாக சில செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சரிவர பணிகளை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அத்தியாவசிய பணிகள் விரைவில் சரியாக நடைபெற ஆணையரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் எஸ்.நரசிம்மன் கூறியதாவது:

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சியில் இணைந்துள்ள நகராட்சிகளில் ஏற்கெனவே இருந்த பல ஆனையர்கள், தங்களின் சுய முடிவு எடுக்கும் அதிகாரத்தை இழந்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக தாம்பரம் மாநகராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை ஆனையராக நியமிக்க வேண்டும்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பீர்க்கங்கரனை, பெருங்களத்தூர் போன்ற பகுதிகள் கடந்த காலத்தில் பெரும் வெள்ள பாதிப்புக்கு உள்ளானவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE