சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் - பருவமழை பணிகளை கண்காணிக்க 5 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் :

சென்னை மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க அமுதா உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பருவமழை தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க, பொறுப்பு அதிகாரி மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாக 5 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கான பொறுப்பு அதிகாரியாக வணிகவரித் துறை ஆணையர் எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தாம்பரம் மற்றும் சென்னை நகரில் சோழிங்கநல்லூர் மற்றும் அருகில் உள்ள செங்கல்பட்ட மாவட்டங்களில் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை செயலர் பி.அமுதா கவனிப்பார். சென்னை மாநகராட்சி தெற்கு பகுதிகளுக்கு போக்குவரத்துத் துறை செயலர் கே.கோபால், வடக்கு பகுதிகளுக்கு உயர்கல்வித் துறை செயலர் டி.கார்த்திகேயன், மத்திய பகுதிகளுக்கு டிட்கோ தலைவர் பங்கஜ்குமார் பன்சல் ஆகியோர் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இப்பகுதிகளில் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன், வெள்ள பாதிப்பு பகுதிகளில் தேவையான மீட்பு, நிவாரண நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE