குறும்பனை மீனவர் கொலை வழக்கில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் விசாரணை :

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மேலகுறும்பனை பாத்திமா தெருவை சேர்ந்தவர் புரூனோ (53), மீனவர். இவர், கடந்த 27-ம் தேதி தனது உறவினரின் திருமண வீட்டு முன்பு நின்று சத்தமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த புரூனோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். கரை திரும்பிய புரூனோவுக்கு வயிற்று வலி வந்ததையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து புரூனோவின் சகோதரி மங்களமேரி அளித்த புகாரின் பேரில் கருங்கல் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்தோணி என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் புரூனோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். இதில், புரூனோவை குறும்பனை சந்திப்பில் மேலும்4 பேர் சேர்ந்து தாக்கியது தெரிய வந்தது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவியதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE