தி.மலை மாவட்டத்தில் பரவலான மழைப்பதிவு :

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தாக்கத்தால் பரவலான மழை பதிவாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. முக்கிய நீர்த்தேக்க அணைகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்ச மழைப்பதிவாக தண்டராம்பட்டில் 30 மி.மீ ஆக பதிவாகியுள்ளது. ஆரணியில் 9.5, செய்யாறில் 20, செங்கத்தில் 19.8, ஜமுனாமரத்தூரில் 14, வந்தவாசியில் 25, போளூரில் 15.2, திருவண்ணாமலையில் 10, கலசப்பாக்கத்தில் 22, சேத்துப்பட்டில் 17, கீழ்பென்னாத் தூரில் 12.4, வெம்பாக்கத்தில் 13 மி.மீ மழை பதிவாகி யுள்ளன.

அணைகள் நிலவரம்

சாத்தனூர் அணையின் ஷட்டர்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் இருந்து அணைக்கு நேற்று காலை வரப்பெற்ற 1,060 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. குப்பநத்தம் அணை 59.04 அடி உயரத்துடன் 700 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 57.07 அடி உயரத்துக்கு நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கு வரும் 80 கன அடி தண்ணீரை அப்படியே வெளியேற்றி வருகின்றனர்.

மிருகண்டா நதி அணை 22.97 அடி உயரம் கொண்டது. தற்போது 20.66அடி உயரத்துடன் நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கு 21 கன அடிக்கு நீர்வரத்து இருக்கிறது.

செண்பகத்தோப்பு அணை 62.32 அடி உயரம் கொண்டது. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு 49 கன அடிக்கு நீர்வரத்து இருக்கும் நிலையில் 37 கன அடிக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE