இல்லம் தேடி கல்வி திட்ட கருத்தாளர்களுக்கு ஈரோட்டில் பயிற்சி :

இல்லம் தேடி கல்வி திட்ட கருத்தாளர்களுக்கு ஈரோட்டில் பயிற்சி முகாம் நடந்தது.

தமிழகத்தில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் தளர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை போக்க இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களில் முன்னோட்டமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தில் பங்கேற்கும் கருத்தாளர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கெதிரான குற்றங்களைத் தடுத்தல், கல்வியின் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தும் விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும் நாடகங்களைக் கலைக்குழுவினர் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் கல்வியாளர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் பயிற்சிகளை வழங்கினர். இதன் தொடர்ச்சியாக, பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு , மாவட்ட, ஒன்றிய அளவிலான பயிற்சிகள் வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் மாணவர்களின் மன அழுத்தம் நீங்கி கற்றல் திறன் மேம்படும், என்றார்.

சுடர் அமைப்பின் இயக்குநர் எஸ்.சி.நடராஜ் உள்ளிட்டோர் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE