மின்சாரம் தாக்கி தம்பதி மரணம் :

கோவில்பட்டி: கோவில்பட்டி அன்னை தெரசா நகர் என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் சண்முகராஜ்(63). தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் மின் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி சுப்புலட்சுமி (62). இவர்கள் வீட்டில் முன்பகுதியில் குழாய் மற்றும் இரும்பு சீட்டுக்களால் ஆன கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதில், மின் விளக்குக்கான வயரிங் செய்யப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் நண்பகல் முதல் கோவில்பட்டி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. மாலையில் சண்முகராஜ் காயப் போட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக இரும்பு கூரைக்கு கீழ் பகுதிக்கு வந்தார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த அவரது மனைவி சுப்புலட்சுமி அங்கு ஓடிவந்தார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் உயிரிழந்தனர்.

கோவில்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். “இரும்பு கூரையில் இருந்த மின் வயரில் மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது” என, போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE