திருப்பத்தூரில் மாவட்டத்தில் - 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் : பாதுகாப்பு பணியில் 350 காவலர்கள்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு பாதுகாப்புப்பணியில் 350 காவலர்கள் ஈடுபட்டு வருவதாக எஸ்பி டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜவுளி, இனிப்பு, பட்டாசு உள்ளிட்டவை வாங்க பஜார் மற்றும் கடை வீதிகளில் கூடி வருகின்றனர். கரோனா விதிமுறைகளை கடை பிடிக்காமல் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக பஜார், மார்க்கெட் பகுதி களில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை பலப்படுத்தவும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்புப்பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி., டாக்டர்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தீபாவளி பண்டிகையை யொட்டி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். விலை உயர்ந்த நகைகள், ஆபரணங்களை அணிந்து வர வேண்டாம்.

தீபாவளி முன்னிட்டு திருப்பத்தூர் நகரில் ஜின்னா ரோடு, மார்க்கெட் பகுதி என 2 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அங்கு காவலர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர்.

வாணியம்பாடியில் காதர்பேட்டை மற்றும் முகமது அலி பஜார் பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்பூரில் பழ மார்க்கெட் பகுதியிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அங்கு பாதுகாப்புப் பணிக்கு காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இது மட்டுமின்றி, அந்தந்த காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் 350 காவலர்கள், 100 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக சீருடை அணியாத மகளிர் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாராவது குற்றச்செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக் கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE