பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 10 ஆண்டு சிறை : நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

திருமண ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

நாமக்கல் அடுத்த போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி (39). அவர் அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். அவரது சூளையில் விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் (25) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

அப்போது செங்கல் சூளை உரிமையாளரின் மகளைதிருமண ஆசை வார்த்தைகூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக எருமப்பட்டி காவல் நிலையத்தில் ராமசாமி புகார் அளித்தார். இதன்பேரில் சக்திவேல் மற்றும் சூளையில் வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த முருகன் (28) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சக்திவேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகனை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE