எளியமுறையில் பயிர்க்கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மனு :

ஈரோடு மாவட்ட விவசாயிகள் இடையூறு இல்லாமல் பயிர்க்கடன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது.

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமையிலான நிர்வாகிகள், ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

ஈரோடு மாவட்டத்தில் 160-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பயிர்க்கடன் பெறச் செல்லும் விவசாயிகளிடம், நில ஆவணங்களான பட்டா , சிட்டா மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் நடப்பு பசலிக்காக அடங்கல் பெற்று வர வேண்டுமென கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பயிர் செய்து முடித்த பின்புதான், நடப்பு பசலிக்கு அடங்கல் வழங்க முடியும் என கிராம நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் எளிதாக பயிர்க்கடன் பெறும் வகையில் கூட்டுறவு மற்றும் வருவாய்துறைக்கு உரிய உத்தரவுகளை ஆட்சியர் பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE