சிவகங்கை அருகே 750 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு :

சிவகங்கை தொல்லியல் ஆர்வலர் புலவர் கா.காளிராசா, பொருளாளர் பிரபாகரன், அரசனேரி கீழமேடு சரவணன் ஆகியோர் சூரக்குளத்தில் நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில் சிதிலமான நான்கு கால் மண்டபத்தில் இருந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து புலவர் கா.காளிராசா கூறியதாவது: இப்பகுதியில் உள்ள காட்டுக் கோயில்களை நாட்டரசன்கோட்டை மக்கள் வழிபடுகின்றனர். அக்காலத்தில் காட்டுக் கோயில்களுக்கு செல்வோர் இளைப்பாறும் இடமாக நான்கு கால் மண்டபம் இருந்திருக் கலாம். இந்த மண்டபத்தின் தெற்குப்பகுதியில் நான்கரை அடி நீளத்தில் 5 வரிகளைக் கொண்ட கல்வெட்டு உள்ளது.

குலசேகர பாண்டியனின் ஏழாம் ஆட்சி யாண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கிபி 1268 முதல் 1311 வரை ஆட்சி செய்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன்மூலம் இக்கல்வெட்டு 1275-ம் ஆண்டு வெட்டப்பட்டிருக்கலாம் என அறிய முடிகிறது.

இக்கல்வெட்டில், கோமாரபன்மரான திரிபு வனச் சக்கரவர்த்திகள் குலசேகர தேவர்க்கு ஏழாம் ஆண்டு முடிகொண்ட சோழபுரத்தில் உள்ள திருச்சிவணமுடைய நாயனார் கோயில் தானத்தார் எனும் அரசர்களால் நியமிக்கப்பட்ட கோயில் அலுவலர்கள் இவ்வூரைச் சேர்ந்த உய்யவந்தான் எட்டி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட நிலத்தை அவர்கள் இறைவனுக்குத் தேவதானமாக கொடுத்ததாக எழுதப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE