கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1.6 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்.ஐ., சிவசாமி, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்றவரை மடக்கினர். அதில் அவர் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிந்தது. விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த வீராசாமி (54) என்பதும், கிருஷ்ணகிரி நகர் பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கிச் சேகரித்து கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிந்தது. இதையடுத்து வீராசாமி அதே பகுதியில் 32 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 1,600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE