திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் - கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் :

மத்திய அரசைக் கண்டித்து, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசைக் கண்டித்து, கோவையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள் முன்பு நேற்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக், பீளமேடு அண்ணா நகரில் உள்ள தனது அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கோவை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் மேட்டுப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன்பும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி பீளமேட்டில் உள்ள அவரது வீட்டின் முன்பும், புறநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தொண்டாமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், சிங்காநல்லூர் ஹெச்எம்எஸ் தொழிற்சங்க அலுவலகம் முன்பும், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன்பும், மாநில செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், எம்.பி பி.ஆர்.நடராஜன், மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி

கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜ் தலைமையில் நகர திமுக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி தலைமையில் மகாலிங்கபுரத்திலும், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் குமரன் நகர் பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் கொங்குநகர் பகுதியில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் தலைமையில், திமுகவினர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை

உடுமலை அடுத்த துங்காவி கிராமத்தில் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை நகரில் நகர செயலாளர் மு.மத்தின் தலைமையிலும் வெஞ்சமடை பகுதியில் இ.கம்யூ. மாவட்ட நிர்வாகி சவுந்திரராஜன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE