இந்தியா, இலங்கை இடையே - கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை : இலங்கை அமைச்சர் தகவல்

இந்தியா, இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான், பின்தங்கிய கிராமப்புற அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதன்பின் இருவரையும் ராமேசுவரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது: இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களையும், இலங்கை மீனவர்களையும் பேச வைத்து, இரு நாட்டு மீனவர்களும் சுமுகமாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

பின்னர் செந்தில் தொண்டைமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியா, இலங்கை மீனவர்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்தி, அமைதியான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள அரசிடம் வலியுறுத்துவோம்.

இலங்கையில் துறைமுக விரிவாக்கப் பணிகளை தான் சீனாவைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இலங்கை, இந்தியா உறவு எந்தவிதத்திலும் பாதிக்காது என்று கூறினார்.

அமைச்சர் வியாழேந்திரன் கூறியதாவது: இலங்கை, இந்தியா இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக புதுச்சேரி முதல்வரை சந்தித்துப் பேசினோம். அவரும் சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டால் இரு நாடுகளிலும் மருத்துவம், சுற்றுலா மேம்படும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE