சண்டைக்கோழி வாங்கியதில் தகராறு கிருஷ்ணகிரியில் இளைஞர் கொலை :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் சண்டைக்கோழி வாங்கிய விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் அகமத் என்பவரது மகன் இம்ரான் (22). வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். சண்டைக்கோழிகள் வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வந்தார்.

இந்நிலையில் இவர் கிருஷ்ணகிரி நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்த மார்கோ (56) என்பவரிடம் சண்டைக்கோழியை வாங்கியது தொடர்பாக தகராறு இருந்தது. இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் தியேட்டர் அருகில் இம்ரான் - மார்கோ இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மார்கோ மற்றும் அவரது மகன் குல்பி என்கிற மணிமாறன் (30) ஆகிய 2 பேரும் இம்ரானை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தனர்.

அப்போது இதனைத் தடுக்க வந்த இம்ரானின் அண்ணன் சலாவுதீன் (36) என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து அங்கிருந்து மார்கோ, மணிமாறன் ஆகியோர் தப்பிச் சென்றனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி, டிஎஸ்பி சரவணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக நகர காவல் ஆய்வாளர் கபிலன் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மார்கோ, அவரது மகன் குல்பி என்கிற மணிமாறன் ஆகியோரை தேடி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE