முன்னுரிமையற்ற ரேஷன்கார்டுகளுக்கு - 5 கிலோ இலவச அரிசி திடீர் நிறுத்தம் :

தமிழகத்தில் முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு தாரர்களுக்கு பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 5 கிலோ இலவச அரிசி திடீரென நிறுத்தப்பட்டது.

கரோனா 2-வது அலையால் நாடு முழுவதும் ஏழைகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு உதவும் வகையில் மே முதல் ஜூலை வரை ரேஷன் கடைகளில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் கடந்த மாதம் அத்திட்டத்தை நவம்பர் வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

இதையடுத்து முன்னுரிமையுள்ள, முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த மாதம் வரை இலவச அரிசி வழங்கப் பட்டு வந்தது. தற்போது திடீரென முன்னுரிமையற்ற கார்டுதாரர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி வழங்குவது நிறுத்தப் பட்டது. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந் துள்ளனர்.

இதுகுறித்து வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘முன்னுரிமையற்ற கார்டுதாரர்களுக்கும் ஜூலை மாதம் வரை பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் இலவச அரிசி வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் முதல் முன்னுரிமையற்ற கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE