ரேஷன் அரிசி பதுக்கிய இருவர் கைது :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகராட்சி முருகம்பாளையம் பாரக்காடு பகுதியிலுள்ள வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், திருப்பூர் வட்ட வழங்கல் அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் சுந்தரம் தலைமையில் தனி வருவாய் ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பாரக்காடு 4-வது வீதியில் சுகுமார் என்பவருக்கு சொந்தமான வீட்டின் 5 அறைகளில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

வீட்டின் முன்புறத்தில் மளிகை கடை போன்று அமைத்து, உள் அறைகளில் ரேஷன் அரிசி மூட்டை கள் பதுக்கப்பட்டிருந்தன. ஆட்கள் இல்லாத நிலையில், வீட்டின் பூட்டை உடைத்த அதிகாரிகள் சுமார் 12 டன் எடையுள்ள 225 ரேஷன் அரிசி மூட்டைகளை, கடந்த 21-ம் தேதி பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முருகம்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி (22), சூர்யா (20) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

போலீஸார் கூறும்போது, "வடமாநிலத்தவர்கள், இட்லி மாவு அரைப்பவர்கள், கோழி மற்றும் மாட்டுத் தீவனங்கள் தயாரிப்பவர்களுக்கு ரேஷன் அரிசியை விற்று வந்துள்ளனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள சுகுமாரை தேடி வருகிறோம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE