வட்டமலை கரை ஓடை நீர்த்தேக்கத்துக்கு - அமராவதி உபரிநீர் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல் :

அமராவதி ஆற்றில் இருந்து உபரிநீரை, வட்டமலை கரை ஓடை நீர்த்தேக்கத்துக்கு கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்றித்தர வேண்டும் என, தமிழக முதல்வருக்கு, விவசாயிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக வட்டமலை கரை நீர்த்தேக்கம் பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் க.பழனிசாமி தலைமையிலான விவசாயிகள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் வெள்ளகோவில் உத்தமபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது, வட்டமலை கரை ஓடை நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கத்தின் நீர்வடிப்பரப்பு 396 சதுர கி.மீ. நீளம் 1,820 மீட்டர், முழுகொள்ளளவு 268.27 மில்லியன் கன அடியாகும். இந்த நீர்த்தேக்கத்தால் 6,043 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

இந்த நீர்த்தேக்கத்துக்கு அமராவதி ஆற்றில் இருந்து, உபரிநீர் கொண்டு வருவதற்கு வரைபடம் தயார் செய்து, மதிப்பீடு தயார் செய்துள்ளனர். 35 ஆண்டுகளாக திட்டம் நிறை வேற்றப்படாமல், நிலுவையில் உள்ளது. எனவே அமராவதி ஆற்றில் இருந்து உபரிநீரை, வட்டமலை கரை ஓடை நீர்த்தேக்கத்துக்கு கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றித்தர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE