குமாரபாளையம் குடியிருப்பு பகுதியில் - சாலை சீரமைப்பு பணி தாமதத்தால் மக்கள் சிரமம் :

குமாரபாளையம் மேற்கு காலனி சாலை சீரமைப்பு பணி தாமதத் தால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மேற்கு காலனி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தவிர விசைத்தறிக் கூடங்கள் அதிகம் உள்ளது. இதனால், இச்சாலை எப்போதும் மக்கள் மற்றும் வாகன நெரிசலுடன் இருக்கும்.

இந்நிலையில், இச்சாலை குண்டும், குழியுமாக இருந்ததால்வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள் ளாகி வந்தனர். எனவே, இச்சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக பொக்லைன் மூலம் சாலை தோண்டப்பட்டது. ஆனால், இதுவரை சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனால், சாலை அமைக்க தோண்டப்பட்டு ஜல்லிக்கற்கள் குவியலாக கிடக்கும் நிலையில் இச்சாலையை பயன்படுத்தும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும், வாகன ஓட்டிகள் சில நேரங்களில் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் இச்சாலையை விரைந்துசீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE