செங்கம் அருகே பிரபல நிறுவனங்களின் பெயரில் - போலியாக பெயிண்ட் தயாரித்த இளைஞர் கைது : 809 லிட்டர் பெயிண்ட் பறிமுதல்

செங்கம் அருகே பிரபல நிறுவனங்களின் பெயரில், வீட்டிலேயே இயந்திரங்கள் மூலம் போலியாக பெயிண்ட் தயாரித்து வந்த இளைஞரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ணகுருக்கை கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் அன்புதுரை (28). இவர், தனது வீட்டிலேயே பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக பெயிண்ட் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இதையறிந்த பிரபல நிறுவனங்கள், காவல் துறைக்கு புகார் தெரிவித்துள்ளது.

அதன்படி, காவல் துணைகண்காணிப்பாளர் சரவண குமரன் தலைமையிலான காவல் துறையினர், அன்புதுரை வீட்டில் நேற்று நடத்திய சோதனையில் இயந்திரங்களை பயன்படுத்தி பிரபல நிறுவனங்களின் பெயரில் பெயிண்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பாச்சல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அன்புதுரையை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில், இரண்டு பிரபல நிறுவனங்களின் பெயர் களில் தயாரித்து 169 பக்கெட்டு களில் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 809 லிட்டர் பெயிண்ட், இரண்டு இயந்திரம், ஒரு கணினி மற்றும் ரூ.88,970 ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE