ராணிப்பேட்டை மாவட்டத்தில் 736 வாக்குச்சாவடிகள் - வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் : ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 736 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவின் போது நடைடெறும் நிகழ்வு களை முழுமையாக கண்காணிக்க அங்கு வெப் கேமராக்கள் பொருத் தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சி யர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரி வித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் (தனி) ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இதில், நேர்மையான, வெளிப்படையான தேர்தல் நடை பெறுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித் துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் செய்தி யாளர்களிடம் நேற்று கூறும்போது, "ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5,02,407 ஆண் வாக்காளர்களும், 5,29,329 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 52 பேர்என மொத்தம் 10 லட்சத்து 31 ஆயிரத்து 788 வாக்காளர்கள் ஏப்ரல் 6-ம் தேதி வாக்களிக்க தகுதியானவர்கள். ராணிப் பேட்டை மாவட்டத்தில் 1,447 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில், 328 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடி களில் நுண் பார்வையாளர்கள், காவல் துறையினர், துணைராணுவத்தினர் பணியில் ஈடுபடுத் தப்பட உள்ளனர். மொத்தமுள்ள 1,447 வாக்குச்சாவடிகளில் 736 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவின் போது நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிக்க அங்கு வெப் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பதற்றமான வாக்குச்சாவடிகளில் வீடியோகேமராக்கள் மூலம் கண்காணிப் புப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப்பணியில் 490 மத்திய ஆயுத காவல் படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்து 4 குழுவினர் என மொத்தம் 280 காவலர்கள் ஈடுபட உள்ளனர்.

இது தவிர ஒவ்வொரு தொகுதிக்கு 2 துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிக்குழு ஒன்றும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மற்றொரு குழுவினர் தேர்தல் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபட உள்ளனர். மேலும், மாவட்டம்முழுவதும் அதிவிரைவுப்படை யினர் 18 குழுக்களாக எஸ்பி தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, வாக்காளர் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவுக்கு முன்பாக மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த வேண்டிய பொருட்கள் பாதுகாப்பு முறைப்படி அனுப்பி வைக்கப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகள் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளன. 5-ம் தேதி (இன்று) இறுதிக்கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் அனைவரும் கலந்து கொள்ள அறிவுறத்தப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்முழுவதும் 193 நுண் பார்வையாளர்கள், 31 வீடியோகிராபர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய் பரவல் காரணமாக வாக்களிக்க வரும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி, அரசு வழங்கிய 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி தங்களுக்கான வாக்கினை செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பெட்டிகளை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்படும். அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை 24 மணி நேரம் ஆயுதம் ஏந்திய காவலர்கள், துணை ராணுவத்தினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான முன்னேற் பாடுகளை தேர்தல் சிறப்பு பொது பார்வையாளர், தேர்தல் பொது பார்வையாளர், காவல் சிறப்பு பார்வையாளர்கள் தொடர்ந்து கண்காணித்து தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். எனவே, நேர்மையான, வெளிப்படையான தேர்தலை நடத்த மாவட்ட தேர்தல் பிரிவு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

பொதுமக்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்