உடுமலை தளி சாலையில் பொது நூலகம் இயங்கிவருகிறது. 20,000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இந்நிலையில், நூலக நுழைவு வாயிலை ஒட்டி, பெயர் பலகையை மறைத்தபடி
நகராட்சி சார்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இதுகுறித்து வாசகர்கள் கூறும்போது, “50 ஆண்டுகளுக்கும் மேலாக நூலகம் இயங்கிவருகிறது. நூலகத்தின் முன் தென்பகுதியை ஒட்டிய காலியிடத்தில் நிழற்குடை அமைக்கலாம். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நகராட்சிக்குட்பட்ட 2 இடத்தில் தலா ரூ.2.25 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. நூலகத்தை மறைக்காதவாறு நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.