உள்நாட்டு உற்பத்தியாளர்களின் தேவைகளுக்கு பிறகே நூல், பஞ்சு ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

உள்நாட்டு உற்பத்தியாளர்களின் தேவைகளுக்கு பிறகே நூல், பஞ்சு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம், தமிழகமுதல்வர் பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில், "திருப்பூரில் பின்னலாடை தயார் செய்யப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடு வர்த்தகம் நடைபெற்று வருவதால் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. கரோனா பாதிப்புக்கு பிறகு, தற்போது மெல்ல, மெல்ல பின்னலாடைத் தொழில் மீண்டு வருகிறது. இந்த முக்கியமான காலகட்டத்தில் தற்போது நூல் விலை உயர்வு, பின்னலாடை உற்பத்தியாளர்களை அச்சமடைய செய்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நூல் கிடைப்பதில்லை. மாறாக, நூல் மற்றும் பஞ்சுகளைஏற்றுமதி செய்யவே உற்பத்தியாளர்கள் விரும்புகின்றனர். இதனால், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நூல் மற்றும் பருத்தி கிடைப்பதில் கெடுபிடி தொடர்கிறது. நூல் விலையும் உயர்ந்து விடுகிறது. உள்நாட்டு உற்பத்தியாளர்களின் தேவைகளுக்கு பிறகே அவற்றை ஏற்றுமதிசெய்ய அனுமதிக்க வேண்டும்.

நூல் மற்றும் பஞ்சு ஏற்றுமதி செய்வதைவிட, அவற்றின் மூலமாகதயாரிக்கப்படும் ஆடைகளை ஏற்றுமதி செய்தால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். நூல் விலை அடிக்கடி மாறுவதால், ஆடைகளுக்கான விலையை நிர்ணயம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மத்திய,மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்