சிறுவர்களை கொத்தடிமை போல நடத்தி ஆடு மேய்க்க வைத்தவர் கைது :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம்புதூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 14 வயதுக்குட்பட்ட 4 மகன்கள் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(49) ஆடு மேய்க்கும் பணிக்கு 4 பேரையும் அழைத்து செல்வதாகவும், அதற்கு கூலியாக ஆண்டுதோறும் பணம் கொடுப்பதாகவும் தம்பதியிடம் தெரிவித்து, 4 பேரையும் அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுவர்கள் 4 பேரையும் சூரக்கோட்டை பரிசுத்தம் நகர் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்திய கோவிந்தராஜ் அவர்களை கொத்தடிமைகள் போல நடத்தியுள்ளார். இதுகுறித்து சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது. இதையடுத்து, கொத்தடிமைகள் போல நடத்தப்பட்ட 4 சிறுவர்களும் கோட்டாட்சியர் ரஞ்சித் எடுத்த நடவடிக்கை மூலம் டிச.7-ம் தேதி மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து சூரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்குப் பதிவு செய்து சிறுவர்களை கொத்தடிமைகள் போல நடத்திய கோவிந்தராஜை நேற்று கைது செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE