ஓசூரில் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு நல உதவிகள் : அமைச்சர் காந்தி வழங்கினார்

ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே வசிக்கும் 144 புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு ரூ.7 லட்சத்து 93 ஆயிரத்து 223 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். எம்எல்ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு துணிகள், சமையல் பாத்திரங்கள், எரிவாயு இணைப்புகள் என மொத்தம் ரூ.7லட்சத்து 93ஆயிரத்து 223 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து ஓசூர் ஒன்றியம் பெலத்தூர் ஊராட்சியில் ரூ.86.50 லட்சம் மதிப்பில் ஆடை உற்பத்தி மற்றும் வடிவமைப்பு கட்டிட கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 50 பயனாளிகளுக்கு பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஆணைகளை வழங்கினார். தளியில் நடைபெற்ற நிகழ்வில் ரூ.314.40 லட்சம் மதிப்பில் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட கட்டுமானப் பணிகளை பூமி பூஜை செய்து அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

தளி ஒன்றியத்தில் 25 பயனாளிகளுக்கு பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் ஓசூர் கோட்டாட்சியர் தேன்மொழி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மணிமேகலை நாகராஜன், முன்னாள் எம்எல்ஏ.க்கள் சத்யா, செங்குட்டுவன், முருகன், முன்னாள் எம்பி சுகவனம், வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE