தருமபுரி ஆயுதப்படை வளாகத்தில் சந்தன மரம் வெட்டிய 5 பேர் கைது :

தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு ஆகிய அலுவலகங்கள் கடந்த சில மாதங்களாக தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலக கட்டிடங்களுக்கு பின்புறம் சந்தன மரங்கள் இருந்தன. கடந்த மாதம் 8-ம் தேதி இரவு மர்ம நபர்கள் சிலர் சந்தன மரங்களை வெட்டி பெரிய மரத்துண்டுகளை மட்டும் திருடிச் சென்றனர்.

சில நாட்களுக்கு பிறகே இதையறிந்த போலீஸார் சந்தன மரங்களை கடத்திய நபர்களை தேடி வந்தனர். தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார்தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் மேம்பட்டு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (22), உமாபதி (24), ராமேஸ்வரன் (35), காளியப்பன் (22), கொரட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணாயிரம் (60) ஆகிய 5 பேருக்கு சந்தன மர திருட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 3 கிலோ சந்தன கட்டைகள், மரம் வெட்ட பயன்படுத்தும் கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE