தூத்துக்குடியில் நான்கு மாடி கட்டிடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி :

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையா (41). கட்டுமான தொழிலாளியான இவர், தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் தற்காலிக பேருந்து நிலையம் எதிரே மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று மாலை 3.30 மணியளவில் முருகையா திடீரென 4 மாடி கட்டிடத்தின்மேல்தளத்துக்கு சென்று 'காப்பாற்றுங்கள், மாவட்ட ஆட்சியர் வரவேண்டும்' என கூச்சலிட்டவாறு குதிக்க முயன்றுள்ளார். தூத்துக்குடி மத்திய பாகம் உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் தலைமையில் போலீஸாரும், தூத்துக்குடி நகர தீயணைப்பு நிலைய அதிகாரி சகாயராஜ் தலைமையில் தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து முருகையாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை கீழே அழைத்து வந்தனர்.

“சமீபத்தில் அவரது சகோதரர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது இறந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக கட்டிடத்தின் மேல் ஏறி குதிக்க முயன்றுள்ளார்” என, போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE