மூத்த பத்திரிகையாளர் ‘இந்து கல்யாணம்’ மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல் :

By செய்திப்பிரிவு

மூத்த பத்திரிகையாளர் என்.கல்யாணசுந்தரம்(86) அமெரிக்காவில் நேற்று முன்தினம் காலமானார்.

1935 ஏப்.16-ல் மதுரையில் பிறந்த கல்யாணசுந்தரம், 1961-ல் 'தி இந்து' ஆங்கில நாளிதழில் பணியில் இணைந்தார். தொடக்கத்தில் வேலூர், சேலத்தில் செய்தியாளராகப் பணியாற்றிய அவர், சென்னைக்கு மாறியதும் அரசியல் நிருபராகப் பணியாற்றி 2000-ல் ஓய்வு பெற்றார்.

காங்கிரஸ் கட்சி, காவிரி பிரச்சினை, உணவுப் பொருள் வழங்கல் துறை தொடர்பான செய்திகளை விரிவாகப் பதிவு செய்தவர். குடும்ப திருமண விழாவில் பங்கேற்க அமெரிக்கா சென்றவர், மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு மனைவி, இரு மகள்கள், மகன் உள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தி இந்து' நாளிதழில் அரசியல் செய்தியாளராக ஏறத்தாழ 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் என்.கல்யாணசுந்தரம் மறைவு செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன். அரசியல் வட்டாரத்தில் அனைவராலும் 'இந்து கல்யாணம்' என்று அழைக்கப்பட்ட அவர், கருணாநிதியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.

சென்னை நிருபர்கள் சங்கம், சென்னை பத்திரிகையாளர் மன்றம் போன்ற அமைப்புகளில் பொறுப்பு வகித்து பத்திரிகையாளர்களின் நலன்களுக்காகவும் அவர் பாடுபட்டார். கல்யாணசுந்தரத்தை இழந்து வாடும் குடும்பத் தினர், பத்திரிகை நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: "பத்திரிகை துறையில் முக்கியப் பங்காற்றிய, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் முன்னாள் செய்தியாளர், மூத்த பத்திரிகையாளர் கல்யாணசுந்தரம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட செய்தியில், “காமராஜர், ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோரிடம் அரசியல்ரீதியான நட்பைப் பெற்றிருந்தவர். இவர்கள் மனதில் இருப்பதை துல்லியமாக வெளிப்படுத்துகிற ஆற்றலைப் பெற்றவர். கல்யாணசுந்தரத்தின் மறைவு பத்திரிக்கைத்துறைக்கு மட்டுமல்ல, தேசிய சக்திகளுக்கு பேரிழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதி தமிழன், சென்னை நிருபர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.ரங்கராஜ் உள்ளிட்டோரும் கல்யாணசுந்தரத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE