மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து அரசூர், எருக்கூர், புத்தூர், தண்ணீர்பந்தல், சாமியம், தைக்கால், கொள்ளிடம், வல்லம்படுகை, வேலக்குடி, கடவாச்சேரி, அம்மாபேட்டை ஆகிய கிராமங்கள் வழியாக சிதம்பரத்துக்கு 3 அரசு நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த 3 பேருந்துகளும் சிதம்பரத்திலிருந்து சீர்காழிக்கும், சீர்காழியிலிருந்து சிதம்பரத்துக்கும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் வகையில், நாள்தோறும் அதிகாலை முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வந்தன. இதனால், இப்பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். ஆனால், இந்த 3 பேருந்துகளின் சேவை காலப்போக்கில் நிறுத்தப்பட்டுவிட்டன.
இதனால், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, சிதம்பரம்-சீர்காழி இடையே இயக்கப்பட்ட 3 அரசு நகர பேருந்துகளையும் மக்களின் நலன் கருதி மீண்டும் இயக்க வேண்டும் என்று மயிலாடுதுறை ஆட்சியர் லலிதாவுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.