கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை :

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

நடப்பு பருவத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். 2020-21-ம் ஆண்டுக்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். மழைக்காலத்தில் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.நல்லையா தலைமை வகித்தார். தாலுகா தலைவர்கள் ஆர்.சிவராமன், ஆர்.ரவீந்திரன், பிச்சையா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் எஸ்.அழகுமுத்துபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தேசியக் குழு உறுப்பினர் வி.பாலமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர்கள் அசோக்குமார், ஏ.லெனின்குமார், வேலாயுதம், வி.கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE