தேன்கனிக்கோட்டை அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி : ரூ.2.50 கோடி நகை, பணம் தப்பியது

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த நொகனூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த 20-ம் தேதி மாலை 6 மணிக்கு வங்கியை ஊழியர்கள் வழக்கம் போல் பூட்டிச் சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை வங்கி ஜன்னல் கம்பிகளை அறுத்து மர்மகும்பல் உள்ளே புகுந்தது.

வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்த மர்மகும்பல், காஸ் வெல்டிங் மூலம் நகைகள் இருந்த லாக்கரை உடைக்க முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்ததால், மர்ம கும்பல் தப்பியோடியது.

இதனால் வங்கி லாக்கரில் இருந்த ரூ.2.50 கோடி மதிப்பிலான நகைகள், பணம் தப்பியது. நேற்றுகாலை வழக்கம் போல் பணிக்கு வந்த வங்கி ஊழியர்கள், ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் காந்தராஜ் ஆகி யோருக்கும், தேன்கனிக்கோட்டை போலீஸாருக்கும் தகவல் அளித்தனர்.

நிகழ்விடத்தில் தேன்கனிக் கோட்டை போலீஸார், கிருஷ்ணகிரி தடயவியல் நிபுணர் குழுவினர் டிஎஸ்பி சங்கர் தலைமையில் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். மேலும், மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் முரளிகண்ணன் நேரில் பார்வையிட்டார். தேன்கனிக்கோட்டை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE