நடிகர் சூர்யாவை ஆதரித்து - பாம்பு, எலிகளுடன் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம் :

மதுரையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக பழங்குடியின மக்கள் பாம்புகள், எலிகள் மற்றும் பூம்பூம் மாடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ’ஜெய் பீம்’ படத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக மதுரையில் பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைகளில் பாம்புகள், எலிகள் மற்றும் பூம்பூம் மாட்டுடன் வந்து சூர்யாவுக்கும், அவர் நடித்த ’ஜெய்பீம்’ படத்துக்கும் ஆதரவாக கோஷமிட்டனர்.

தகவலறிந்த மாவட்ட வனத் துறையினர், பாம்புகளை தங்களிடம் ஒப்படைக்குமாறும், அதை பாதுகாப்பாக காட்டில் கொண்டுபோய் விடுகிறோம் என்று தெரிவித்தனர். அதற்கு, பாம்புகளை நாங்களே பாதுகாப் பாக கொண்டுபோய் விடுகிறோம் எனக் கூறி கொடுக்க மறுத்தனர்.

தமிழக பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு மக்கள் அமைப்பைச் சேர்ந்த ஆர்.மகேஸ்வரி கூறியதா வது: பழங்குடி மக்களுக்கு எதிரான அநீதிகள் பற்றியே ‘ஜெய்பீம்’ படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர். அதற்கு பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு சார்பில் ஆதரவு தெரிவிக்கிறோம்.

இப்படத்தைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பழங்குடியின மக்களுக்கு நலத் திட்டங்களை உடனே செய்து தரும்படி ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. இதற்கு நாங்கள் தமிழக அரசுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். எந்தச் சூழ்நிலையிலும் சூர்யாவுக்கு ஆதரவாக இருப்போம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE