பாலாற்றில் மீண்டும் வெள்ளம் :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் பாலாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகஅருகாமையில் உள்ள குடியிருப்புகள், மருத்துவமனைகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.

ஆந்திர மாநிலப் பகுதிகளில் கனமழை பொழிந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து மழை பெய்ததால் அந்தப் பகுதிகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. காலை நிலவரப்படி விநாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் பாலாற்றில் வந்தது. வழியில் ஆற்றுக்கு வரும் தண்ணீரும் சேர்ந்து 90 ஆயிரம் கன அடி நீர் பாலாற்றில் சென்றது.

இதனால் வாலாஜாபாத் பகுதியில் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்தது. வாலாஜாபாத் அருகே உள்ள அவளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது.

அதேபோல் வாலாஜாபாத் பேருந்து நிலையம் மற்றும் அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதை தொடர்ந்து ஆற்றங்காரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வாலாஜாபாத் - அவளூர் சாலையில் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் வெங்கச்சேரி தரைப்பாலம் மூழ்கியதால் அந்தப் பகுதியிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்தப் பாலம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE