பத்மநாபபுரம் நகராட்சி பகுதிகளில் உள்ள 21 வார்டுகளிலும் துப்புரவு பணியாளர்கள் மூலம் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, தரம்பிரித்து வெவ்வேறு பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த 3 மாதங்களில் வீடுகள், வீதிகள், பேருந்து நிலையம், பொது இடங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 8 டன் பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது. நகராட்சி ஆணையர் காஞ்சனா தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், சுகாதார அலுவலர் ராஜாராம், சுகாதார மேற்பார்வையாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடை செய்த பின்னரும் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குகின்றன. குப்பையுடன் அவை கலந்து கிடப்பதால் தரம் பிரிப்பதற்கு துப்புரவு பணியாளர்கள் அதிக நாட்கள் பணியாற்றும் நிலை உள்ளது. எனவே, பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து பொட்டலமிட்டு குப்பைகளில் போடுமாறு உள்ளாட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.