தென்னை மரத்தில் ஏறியபோது : முதியவர் மீது மின்சாரம் பாய்ந்தது :

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே நந்தவனபாளையம் நாயக்கன்பாளையம் தெக்கலூர் வீதியை சேர்ந்தவர் ஆயிமுத்து (75). தென்னை மரம் ஏறி, தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று அப்பகுதியில் உள்ள நாவிதன்புதூர் மணியார் தோட்டத்தில் தேங்காய் பறித்து போடும் வேலைக்கு சென்றிருந்தார். சுமார் 60 அடி உயரம் கொண்ட தென்னைமரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்தார். தென்னை மரத்தின் மேல்பகுதியில் சென்றுகொண்டிருந்த மின் கம்பி, தென்னை மட்டையில் உரசியதில், ஆயிமுத்து மீது மின்சாரம் பாய்ந்தது. மரத்திலேயே மயக்க நிலையில் தொங்கியபடி அவர் இருந்தார். தகவலின்பேரில் பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார், சிறப்பு நிலைய அலுவலர் தங்கவேல், முன்னணி தீயணைப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்துக்கு சென்று முதியவரை மீட்டனர். தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. முதியவர் நல்ல நிலையில் இருப்பதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE