நூல் விலை உயர்வை தடுக்க : மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் : தமிழக தலைமை செயலாளருக்கு திருப்பூர் சைமா கடிதம்

By செய்திப்பிரிவு

நூல் விலை உயர்வை தடுக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்புக்கு, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் (சைமா) சங்கத் தலைவர் ஏ.சி. ஈஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூர் பின்னலாடைத் தொழில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், லட்சக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்புக்கும் ஆதாரமாக உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய பருத்திக் கழகம் (சி.சி.ஐ.,) கடைபிடிக்கும் தவறான கொள்கையால், நூல் விலை 3 மாதங்களுக்குகூட நிலையாக இருப்பதில்லை. பருத்தி விளைச்சல் நன்றாக இருக்கும்போது விவசாயிகளிடம் வாங்கி, அதிக அளவு இருப்பு வைக்கின்றனர். தட்டுப்பாடு ஏற்படும்போது, விலையை உயர்த்தி விற்கின்றனர். பருத்தி வியாபாரிகளும், இருப்பு வைத்து அதிக லாபம் அடைகின்றனர். சிறு, குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சு கிடைப்பதில்லை. உள்நாட்டு தேவையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பஞ்சு, நூல் ஏற்றுமதி செய்யவும் அனுமதிக்கப்படுகிறது. உள்நாட்டு தேவை பூர்த்தியாகாததால் தட்டுப்பாடு ஏற்பட்டு, பஞ்சு, நூல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஒப்பந்தம் செய்த விலைக்கு ஆடைகளை உற்பத்தி செய்து கொடுக்க முடியாமல், பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே பருத்தி பஞ்சை பதுக்கி வைப்பதுபோல, அதிக அளவு இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்க அனுமதிக்கக் கூடாது. உள்நாட்டு தேவைகளுக்கு ஒதுக்கியது போக, மீதியுள்ள பஞ்சு மற்றும் நூலிழைகளை மட்டும் ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும். பஞ்சு, நூல் என மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும், ஆயத்த ஆடையாக மாற்றி வர்த்தகம் செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும்.

இந்நிலை உருவானால் மட்டுமே பின்னலாடைத் தொழில் ஆரோக்கியமான நிலைபெறும். தொழில்துறையினரின், இக்கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE