புழல் பகுதியில் வீடு புகுந்து நகை திருட்டு - தாய், மகன் உட்பட 3 பேர் கைது :

புழல், விநாயகபுரம், சுகன்யா தெரு,சூர்யா நகரைச் சேர்ந்தவர் மோகன்குமார் (44). இவர் கடந்த மாதம் 25-ம்தேதி காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் பீரோவிலிருந்த 24 பவுன் நகைகளை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து புழல்காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து முதல் கட்டமாக சிசிடிவி கேமராபதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்படி, திருட்டில் ஈடுபட்டதாக ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஆதித்யா(22), அவரது தாய் மதுரவாயல் நெற்குன்றம் லட்சுமி(40) ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். விசாரணையில் இவர்கள்இருவரும் சம்பவத்தன்று மோகன்குமார் வீட்டின் அருகில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது, மோகன்குமார் வீடு புகுந்து நகையை திருடியது தெரியவந்தது.

மேலும், திருடிய தங்க நகைகளை ஆதித்யா தனது நண்பர் தேவராஜ் என்பவருடன் சேர்ந்து தனியார் நிறுவனத்தில் அடமானம் வைத்து பணம் வாங்கியதும் தெரியவந்தது. அதன் பேரில் திருட்டு நகைகளை அடமானம் வைத்து கொடுத்த, பொன்னேரியைச் சேர்ந்த தேவராஜ்(26) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமிருந்தும் 20 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE