கிருஷ்ணகிரி அரசு மாதிரிப்பள்ளி மாணவர்களுக்கு - கேவிஎஸ் குழுமம் சார்பில் ரூ.5.14 லட்சம் மதிப்பில் கையடக்க கணினி :

கிருஷ்ணகிரி அரசு மாதிரிப்பள்ளி மாணவர்களின் கல்வி பயன்பாட்டுக்காக கேவிஎஸ் குழுமம் சார்பில் ரூ.5 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் கையடக்க கணினிகளை ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம், கேவிஎஸ் சீனிவாசன் வழங்கினார்.

கிருஷ்ணகிரி அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில், அரசு மாதிரிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி பயன்பாட்டுக்காக, காவேரிப்பட்டணம் கேவிஎஸ் குழுமம் சார்பில் ரூ.5 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.

50 கையடக்க கணினிகளை கேவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் கேவிஎஸ் சீனிவாசன், கேஎம் சுவாமிநாதன் ஆகியோர் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியிடம் வழங்கினர். மாதிரிப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள கையடக்க கணினி பைபர் நெட் இணைப்பு வழங்கப்பட்டிருக்கும். இதன் மூலம் மாநில அளவில் பாடத்திட்டங்கள் மற்றும் வினாக்களை நேரடியாக மாணவர்களே தெரிந்துகொள்ள முடியும். கேட்கப்படும் வினாக்களுக்கு உடனடியாக இணைய வழியாகவே பதில் வழங்க முடியும். மேலும், பாடத்திட்டங்கள் மட்டுமன்றி நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்கு நேரடியாக பயிற்சிகள் பெற முடியும் என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது தேர்தல் வட்டாட்சியர் ஜெயசங்கர் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE