மர்மக் காய்ச்சலுக்கு மாணவர் உயிரிழப்பு :

வள்ளுவர்புரத்தில் மர்மக் காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை மேற் கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பெலவர்த்தி ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர்புரம் பகுதியில் 7 வயது பள்ளி மாணவர் மர்மக் காய்ச்சலுக்கு உயிரிழந்தார். இதையடுத்து நேற்று பர்கூர் வட்டார மருத்துவர் சிவக்குமார் தலைமையில் மருத்துவர்கள் சங்கீத பிரியா, சூர்யா, கார்த்திக், சுகாதார ஆய்வாளர்கள் தனசேகர், சதீஷ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் உதவியுடன் வள்ளுவர்புரம் பகுதியில் உள்ள வீடுகள்தோறும் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் அங்கு தண்ணீர் தேங்கி உள்ளதா என ஆய்வு செய்து அறிவுரைகளும் வழங்கினர். அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், 100-க்கும் மேற்பட்டோரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அதில், எட்டு பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஓசூருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காய்ச்சல், உடல் சோர்வு அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE