பெண்கள் விழிப்புணர்வுக்கு கல்வி அவசியம் : கிருஷ்ணகிரியில் துணை ஆட்சியர் அறிவுரை

பெண்கள் விழிப்புணர்வுக்கு கல்வி அவசியம் என கிருஷ்ணகிரியில் நடந்த மகளிர் உரிமைகள் குறித்த நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மகளிர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார். மாவட்ட சிறப்பு நீதிபதி மணி தலைமை வகித்தார். தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் செயலாளர் ராஜசிம்மவர்மன், சி.இ.ஓ., மகேஸ்வரி, டி.இ.ஓ.,பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை ஆட்சியர் (பயிற்சி) அபிநயா சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர் கலையரசி, பெண்களுக்கான சிவில் உரிமைகள், பல்வேறு சட்டத்தின் கீழ் பெண்களின் உரிமைகள், போக்சோ சட்டம் குறித்தும், வழக்கறிஞர் நாகசுதா, பணியிடத்தில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல், திருமண உரிமைகள், குடும்ப வன்முறை குறித்தும் விளக்கம் அளித்தனர். முதுகலை ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் (பயிற்சி) அபிநயாபேசுகையில், பெண்கள் விழிப்புணர்வுக்கு கல்வி அவசியம். மத்திய, மாநிலஅரசுகள் பெண்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

பெண்கள் பி.எச்.டி.,வரை அரசு நிதி உதவி பெற்றுபடிக்கலாம். பெண்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.அந்த வாய்ப்புகள் உங்களைச் சுற்றித்தான் உள்ளன. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.பெண் கல்வி குறித்த சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள 181 என்கிற எண் உள்ளது. இதில், பெண் கல்வி குறித்து சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றார். இதில், 70-க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE