இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்சியர் அறிவுரை :

இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான பயிற்சி நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பான மாவட்ட அளவில் முதற்கட்ட பயிற்சி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்தார். சிஇஓ மகேஸ்வரி முன்னிலை வகித்தார். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு, கற்றல், கற்பித்தல் குறித்த பயிற்சி கையேட்டினை வழங்கி ஆட்சியர் பேசியதாவது:

‘கரோனா பெருந்தொற்றுப் பொது முடக்க காலங்களில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி, இழப்புகளைக் குறைத்திடும் வகையில் ‘இல்லம் தேடிக் கல்வி” என்கிற திட்டம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டம் குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக, இத்திட்டம் தொடர்பாக கலைக் குழு கலைஞர்களின் கரகாட்டம் மற்றும் நாடகம் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன. இப்பயிற்சியில் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், கல்வி மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் 3 ஆசிரியர் பயிற்றுநர்கள் என 65 பேர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில் மாவட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன முதலவர் ஸ்ரீனிவாசன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கிருஷ்ணகிரி பொன்முடி, மத்தூர் மணிமேகலை, தேன்கனிக்கோட்டை அன்பழகன், ஓசூர் முருகன், உதவி திட்ட அலுவலர் நாராயணா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அருண்ஜோதி, ஜெய்சங்கர், கணேசன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE