குன்னூர்: இந்தியாவின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு கூட்டமைப்பான இண்ட்கோசர்வ், பன்னாட்டு கூட்டுறவு கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ளது. இதன்மூலம் இண்ட்கோசர்வ் உலகளவில் தனது சந்தையை வலுப்படுத்த வாய்ப்பளிக்கும் என இண்ட்கோசர்வ் தலைவர்பி.பி.சிவகுமார் தெரிவித்தார்.
இந்நிலையில் பன்னாட்டு கூட்டுறவு கூட்டமைப்பின் ஆசிய பசிபிக் மண்டல இயக்குநர் பாலசுப்ரமணியன் அய்யர், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள இண்ட்கோசர்வ் மற்றும் அதன் கூட்டுறவு தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டபெட்டு கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுப்புறச் சூழல் மறு சீரமைப்புப் பணிகளை அவர் பாராட்டினார்.
ஆசிய பசிபிக் மண்டல இயக்குநர் பாலசுப்ரமணியம் கூறும்போது, ‘‘பன்னாட்டு கூட்டுறவு கூட்டமைப்பானது உலகளவில் உள்ள கூட்டுறவு இணையங்களை ஒருசேர கூட்டமைப்பதை தனது கொள்கையாகக் கொண்டு செயல்படுகிறது. 1895-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கூட்டமைப்பு, உலகளவில் 11 நாடுகளில் உள்ள 3 மில்லியன் கூட்டுறவு அமைப்புகளை ஒருங்கிணைத்து, உலகளவில் கூட்டுறவு இணையங்களை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.
இண்ட்கோசர்வ் நிறுவனம் மேற்படி கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதால் சிறந்த எதிர்காலம் ஏற்பட வாய்ப்புள்ளது’’ என்றார். ஆய்வின்போது இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் ஆலோசகர்கள் நிவாசன் ராம், பொது மேலாளர் அக்பர் உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago